There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

கவிதைகள்

Sep 21, 2010


கட்டிய புடவையோடு
வாழ்க்கைப்பட கைகொடுத்தது
வறுமையின் நிறம்
 ***


"பட்டினி" கவிதைக்கு
கிடைத்த பரிசு
காலித் தட்டு
***


பஞ்சு மெத்தை
தோற்றுப் போனது
பழைய சேலையிடம்
***


மழையில் வெளுக்காத
வண்ணத்துப்பூச்சி
வெளுத்தது மனதை.
***



யாரென்று தெரியவில்லை
அசைத்த கையோடு
ரயிலுக்குள் நான்
***


முதுகில் குத்தியவனை
முதுகால் தாங்கியது
வண்டியில் மாடு
***


வியர்வையைத் துடைத்த
அழுக்குச்சட்டையால் மணத்தது
வெள்ளைச்சட்டை
***


உறங்கிய தாயின் உறங்காச் சேயை
தாலாட்டிச் சிரித்தது
காற்றாடிச் சத்தம்
***


கடலில் கலவரம்
விஷமச் சிரிப்புடன்
வெள்ளை நிலா.
***


கதிரவனுக்கும் கடலுக்கும்
கலவரமில்லாக் கலப்புத் திருமணம்
இடம்: தொடுவானம்
*
*
Read More...

கலங்கப்போவது யாரு?

Sep 20, 2010

”கலங்கப்போவது யாரு”
வணக்கம்.. வந்தனம்.. வெல்கம் டு "கலங்கப்போவது யாரு!" நான் உங்க அபிமானத்துக்குரிய தேஜா.
அண்ட் இந்த நிகழ்ச்சிய பற்றிச் சொல்லணும்னா...ம்ம் பேரக் கேட்டவுடனே தெரிஞ்சிருக்கும் இது ஒரு ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சினு!

சரி, நம்ம நிகழ்ச்சியில இது வரைக்கும் 999 எபிசோடுகளை வெற்றிகரமாகக் கடந்து இன்னைக்கு 1000 -வது எபிசோடுக்கு அடி வைத்திருக்கிறோம்....சாரி அடியெடுத்து வைத்திருக்கிறோம்.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட பல ஜோடிகள் மிக அறுவையாக.....மன்னிக்கவும் மிக அருமையாக விளையாடித் தோற்றுப்போனாலும் துரதிர்ஷ்ட வசமாக இந்தக் கடைசிச் சுற்றுவரை  இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர்.

ஏன் துரதிர்ஷ்டம்னு சொல்றேன்னா இந்தப் போட்டியில் ஜெயிப்பவர்க்கு பரிசுகளாய் ஒரு டேபிள்டாப் கிரைண்டர்,  ஒரு வேக்கும் கிளீனர், ஒரு வாஷிங் மெஷின், மேலும் குட்டிக் குட்டிப் பரிசுகள் பல காத்திருப்பதால் இதில் கலந்து கொள்ளும் ஆண்களுக்குச் சற்றே ஆபத்து அல்லது அபாயகரமான சூழல் காத்திருக்கின்றது என்றே கருதப்படுகிறது. இதுவரை வேலைக்கு ஆள் வைத்து செய்துகொண்டிருந்த வீடுகளில் தற்பொழுது வழக்கம்போல கணவர்களே வேலைசெய்யும் ஒரு பரிதாப நிலைமைக்குத் தள்ளப்படுவதால் ஆண்களிடையே ஒரு சிறு பேதியை....மன்னிக்கவும் பீதியை இது கிளப்பியுள்ளது.

சரி.. மேலும் மேலும் இது பற்றிப் பேசி அவர்களைக் கலங்கச் செய்வதை விட நேரடியாக நிகழ்ச்சிக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.

முதல் ஜோடி.. ஆட்டுக்கார அலமு ஆண்ட் அவரது கணவர் வேட்டிக்கார.. மறுபடியும் மன்னிக்கவும் வேட்டைக்கார வேலு!
அடுத்த ஜோடி.. ஒய்யாரி மற்றும் அவரது கணவர் ஒய்.ஒய்.தாஸ்!

இரண்டு ஜோடிகளையும் மேடைக்கு அழைக்கிறோம். (டடட டண்ட டான்)

வாங்க அலமு அண்ட் வேலு.. நேயர்களுக்கு டாடா காட்டுனது போதும். நேரமாயிருச்சு. வாங்க விளையாடலாம்.
அட உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா? வாங்க உக்காருங்க.

தேஜா: ரொம்ப கவனமாக் கேளுங்க. இந்தச் சுற்றில் ஆண்கள் இருவரும் அந்த சவுண்ட் ப்ரூப் அறைக்குள் தள்ளப்படுவார்கள். பெண்களிடம் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். பிறகு இதே போல் பெண்களை உள்ளே தள்ளிவிட்டு ஆண்களிடம் அதே ஐந்து கேள்விகள் கேட்கப்படும். கணவன் மனைவி இருவரும் ஒரே பதிலைக் கூறும் பட்சத்தில் அது சரியான விடையாகக் கருதப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். நான் ரெடி. நீங்க ரெடியா?

அலமு: இதே கேள்விய தான் தினமும் கேக்குறீங்க. புதுசா ஏதாவது கேளுங்களேன்.

ஒய்யாரி: மேக்கப் வேற களைஞ்ச மாதிரி ஒரு பீல் இருக்கு. ஒரு டச்சப் பண்ணிட்டு வர பெர்மிஷன் கிடைக்குமா?

தேஜா: நத்திங் டூயிங். ரெண்டு பேரும் உள்ளே போயிட்டாங்க. முதலில் அலமு வாங்க. ஒய்யாரி யூ பிளீஸ் பீ சீடெட்.

உங்களுக்கான முதல் கேள்வி:

தேஜா: 1 . உங்களுக்கு ஆட்டுக்கார அலமு என்று பெயர் வந்ததன் காரணம் என்ன?

அலமு: எனக்கு இயற்கையிலேயே ஆட்டுக்குட்டினா உயிரு. தூக்கி வச்சு கொஞ்சிகிட்டே இருப்பேன். அதப்பாத்து தோழிகள் எல்லாரும் என்ன ஆட்டுக்காரி ஆட்டுக்காரினு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அலமு என்னுடைய இயற்பெயர். இரண்டும் சேர்ந்து "ஆட்டுக்கார அலமு" என்ற செல்லப் பெயர் வந்திருச்சு. 

தேஜா: 2 . உங்கள் கணவருக்கு வேட்டிக்கார வேலு என்ற பெயர் வந்ததன் காரணம்? மன்னிக்கவும் இந்தப் பெயர் வாயில் நுழைவதில் சற்றுச் சிரமமாக இருப்பதால் அப்படி கேட்டு விட்டேன். "வேட்டைக்கார வேலு" எப்படி வந்தது. சொல்லுங்க..

அலமு: பரவாயில்ல. நாங்க முதல்ல "வெட்டிகார வேலு"னு தான் செல்லமாக் கூப்டுட்டு இருந்தோம். அப்புறம் வேட்டைக்காரன் படத்த அவர் தைரியமாப் பார்த்துட்டு வந்ததுல இருந்து "வேட்டைக்கார வேலு"னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம். தட்ஸ் ஆல். நெக்ஸ்ட் கொஸ்டீன் பிளீஸ்.

தேஜா: 3 . உங்கள் கணவரிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன?

அலமு: எவ்வளோ அடிச்சாலும் தாங்கிக்குவாருங்க. அவர் ரொம்ப நல்லவரு.

தேஜா: 4 . திருமணமாகி உங்கள் கணவர் உங்களுக்கு முதன் முதலில் கொடுத்த பரிசுப் பொருள் என்ன?

அலமு: அவரையே பணம் கொடுத்துப் பரிசாத் தான் வாங்கிட்டு வந்திருக்கேன். இருந்தாலும் அவரோட ஆசைக்காக முதன் முதலா எனக்கு குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தந்தாருங்க. அந்த அன்ப நெனச்சா எனக்கு இப்பக் கூட அழுக பொத்துக் கிட்டு வருதுங்க.

தேஜா: கண்ட்ரோல் யுவர்செல்ப். கண்ணத் தொடச்சுக்கோங்க. நேயர்கள் எல்லாரும் பாத்துட்டு இருக்காங்க. அவங்களையும் பீல் பண்ணி அழவச்சு இத ஒரு மெகாசீரியல் மாதிரி ஆக்கிறாதீங்க. கடைசிக் கேள்வி இது கொஞ்சம் ஜீகே. யோசிச்சு சொல்லுங்க.

கேள்வி என் 5 : எந்திரன் படத்தில் எந்தக் கதாப்பாத்திரம் உங்களை மிகவும் கவர்ந்தது?

அலமு: என்னக் கொடுமைங்க இது..? படமே இன்னும் வரலையே!! எப்படி தெரியும் எனக்கு?

தேஜா: படம் மட்டும் தான் வரல. மத்தபடி கதை கதாப்பத்திரம் எல்லாம் வெளி வந்திருச்சு. சின்னக் கொழந்தையக் கேட்டாக் கூட சொல்லிரும். நான் மொதல்லையே சொன்னேன். இது கொஞ்சம் ஜீகேனு. 

அலமு: ரஜினினு வெச்சுக்கோங்க.

தேஜா: ஓகே.. நீங்க இப்ப உள்ளே போலாம். வேல்ஸ் இப்போ வெளியே வருவாரு. 

(டடட டண்ட டன்)

தேஜா: வாங்க வேலு. உக்காருங்க. உங்க மனைவியிடம் கேட்கப்பட்ட அதே ஐந்து கேள்விகள் உங்களுக்கும் கேட்கப்படும். மேனிப்புலேஷன் ஏதும் பண்ணாம உங்க நெஞ்சத் தொட்டு சரியான விடையை சொல்லுங்க. சரி, கேள்விக்குப் போலாமா?

வேலு: இருங்க.. இது வரைக்கும் அந்த ரூமுக்குள்ள இருந்தப்போ காதுக்குள்ள "வொயிங்..."னு ஒரு சத்தம் மட்டும் தான் கேட்டது. இப்போ உங்க குரலை கேட்டுச் சும்மா அதிருதுல்ல. நான் கொஞ்சம் செட் ஆயிக்கிறேன். இருங்க.

தேஜா: ஒய்யாரி இதுக்குள்ளயே ஒரு 56 தடவ டச்சப் முடிச்சிட்டு "என்ன கூப்பிடுங்க கூப்பிடுங்க"ன்னு சைடுல இருந்து சைகை காமிச்சுகிட்டே இருக்காங்க. அவர்களின் நலம் கருதி நீங்க கேட்ட அந்தக் கால அவகாசத்த என்னாலக் கொடுக்க முடியல. கேள்விக்குப் போலாம். வாங்க.

முதல் கேள்வி: 1 . உங்க மனைவிக்கு ஆட்டுக்கார அலமு என்று பெயர் வந்ததன் காரணம் என்ன?

வேலு: கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம். அப்ப கோழி மீனு முட்ட நண்டுன்னு வெரைட்டியா சமைச்சு வச்சிருந்தாங்க. ஆனா என் மனைவி எனக்கு "ஆட்டுக்கறி" தான் வேணும்னு அடம் பிடிச்சா. ஆனாப் பாவம் பாருங்க. அன்னைக்குப் பார்த்து எல்லாக் கடையும் பூட்டிட்டாங்க. கடைசிவர ஆட்டுக்கறி கெடைக்கவேயில்ல. அந்த ஏக்கத்துல ஏங்கி ஏங்கி பயங்கர ஜுரம் வந்து......கேக்காதீங்க. இப்ப நெனைச்சாக் கூட ஏக்கமா இருக்கு(அந்த மாதிரி இன்னொரு தடவ நடக்காதான்னு) 
கடைசியில ஒரு வாரம் கழிச்சு ஒடம்பு எல்லாம் சரியாகி மறுபடியும் அந்த வீட்டுக்கு விருந்துக்குப் போன போது தான் அவளுக்கு "ஆட்டுக்கார அலமு"னு ஒரு பட்டம் கொடுத்தாங்க. 

தேஜா: வெளங்கிரும்.. இந்தக் கேள்விக்கு உங்களுக்கு ஜீரோ மதிப்பெண்கள் வழங்கப் படுகின்றன. சரி அடுத்தக் கேள்வி.

கேள்வி 2 :  உங்கள் கணவருக்கு வேட்டைக்கார வேலு என்ற பெயர் வந்ததன் காரணம்?

வேலு: என்னது???

தேஜா: சாரி. டையலாக் சீட்-ல அந்த மாதிரி தான் எழுதிருந்தது. உங்களுக்கு எப்படி இந்தப் பெயர் வந்ததுனு சொல்லுங்க?

வேலு: அது என்னென்னா போர் அடிச்சா நான் டார்ச் லைட்ட எடுத்துகிட்டு முயல் வேட்டைக்குப் போறேன்னு சொல்லிட்டு காட்டுக்குத் தப்பிச்சுப் போயிருவேங்க..
"என்ன இருந்தாலும் வீட்டுக்காரிக்கு சேவை செய்யாம வேட்டைக்கு எல்லாம் போறான்டா.. இவன் பெரிய வீரன்டா"னு எல்லாரும் நெனச்சாங்க. அதனால அந்தப் பேரு வந்திருச்சுங்க. 

தேஜா:இதுவும் போச்சா?

வேலு: ச்சே.. கேள்வி எல்லாம் கொஞ்சம் சிக்கலாத் தான் இருக்கு. ஹெல்ப் லைன் எதுவும் கிடையாதா?

தேஜா: அதெல்லாம் ஒரு லைனும் கிடையாது. அடுத்தக் கேள்வி.

கேள்வி என்  3 : உங்களிடம் உங்கள் மனைவிக்குப் பிடித்த குணம் என்ன?

வேலு: எப்பவாது அவ வெந்நீர் வச்சு குடிக்கக் கொடுக்குறப்போ அது எவ்வளோ மோசமான டேஸ்ட்டா இருந்தாலும் "பேஷ் பேஷ்.. வெந்நீர் ரொம்ப நல்லா இருக்கு"னு வெள்ளந்தியா நான் சொல்ற அந்த நல்ல குணம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்மா.

தேஜா: ரொம்ப பீல் பண்ணவேண்டாம். இன்னும் ரெண்டு கேள்வி இருக்கு. அதுக்காவது உங்க ஹார்ட்-அ யூஸ் பண்ணாம மைன்ட் இருந்தா அத யூஸ் பண்ணி பதில் சொல்லுங்க.

கேள்வி 4 :   திருமணமாகி உங்கள் மனைவிக்கு முதன் முதலில் நீங்கள் கொடுத்த பரிசுப் பொருள் என்ன?

வேலு: எனக்கு எல்லாம் வாங்கித் தாங்க பழக்கம்.. ஹி ஹி ஹி

தேஜா: தப்பு. கடைசி கேள்வி இது.

கேள்வி 5 :  எந்திரன் படத்தில் எந்தக் கதாப் பாத்திரம் உங்கள் மனைவிக்கு மிகப் பிடித்தமானது?

வேலு: பாத்திரமா? அவளுக்கு ரொம்பப் பிடிச்சது சோத்துக் கரண்டி தாங்க. அதத்தான் புடிச்சு அடிக்கிறதுக்கு வசதியா இருக்குங்கன்னு அடிக்கடி என்கிட்டே மனசு விட்டு சொல்லுவா. சரியா?

தேஜா: 999 எபிசோடுக்கும் உங்கள தேத்தி தேத்தி நான் கடைசி ரவுண்டு வர கொண்டு வந்தேன். கடைசியில இப்படி கவுத்திட்டீங்களே.. என்னங்க இது?

ஒய்யாரி: தேஜா.. இப் யூ டோன்ட் மைன்ட்....நாங்க விளையாட வரலாமா?

தேஜா: இனிமேல் என்ன விளையாட்டு வேண்டி கெடக்கு? நேயர்களே... அலமு அண்ட் வேலு தம்பதியர் ஜீரோ மதிப்பெண்கள் வாங்கியதால் ஒய்யாரி அண்ட் ஒய்.ஒய்.தாஸ் தம்பதியினர் போட்டியின்றி வெற்றியாளர்களாய் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

ஒய்யாரி அண்ட் ஒய்.ஒய்.தாஸ் தம்பதியரின் ரசிகர்கள் எழுப்பிய வெற்றிக் கரகோஷம் ஸ்டுடியோ கூரையைப் பிளந்தது.

தேஜா: உள்ளே இருக்கும் உங்கள் கணவரை  இழுத்துக் கொண்டு மேடைக்கு வரவும்.

சிறிது நேரம் கழித்து..

ஒய்யாரி: மேடம்.. என் கணவரை ஆளைக் காணோம். எங்க போனார்னு தெரியல?!!

மேடையெங்கும் ஒரே கலவரமானது.

தேஜா: ஹலோ. வீட்டுக்கார வேலு. உங்க போன் அடிக்குது. எடுங்க.

வேலு: ஹலோ.. யாரு?

!???!!??!!: டேய்.. கடைசில என்ன மாட்டி விட்டுட்டியேடா!! அந்தப் பரிசு எல்லாம் எங்க வீட்டுக்குத்தான் வருதா? மவனே எங்க ஏரியாவத் தாண்டி தான உங்க ஏரியா? அப்போ வச்சுக்கிறேண்டி உன்ன.

வேலு: நண்பேன்டா !!   ஹா ஹா ஹா.. 

(டங்ங்ங்ங்ங்க்)

வேலு: ஆஆஆ......ஆஆஆஆஆ (தலையைத் தடவிக் கொண்டே)

அலமு: என்ன சிரிப்பு?? மொவரயப் பாரு... வீட்டுக்கு வாங்க. வச்சுக்கிறேன்.
*
*
Read More...

பேருந்தில் நீ எனக்கு..

Sep 14, 2010





மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன. சாலையில் சென்ற பெண்களின் உடைகளை எல்லாம் காற்று களவாடப் பார்த்தது. சிக்கென்று பிடித்துக் கொண்டு சென்றனர் அனைவரும். மறு கையில் குடை வேறு எதிர் திசையில் மடங்கிக் கொண்டது. குழந்தையோடு வரும் பெண்மணி அதன் கண்களை கை வைத்துப் பொத்திக் கொள்கிறாள். வெகு நாட்களாகத் திறக்கபடாமல் பூட்டி இருந்த டீக்கடை ஒன்று அனைவருக்கும் ஒதுங்க இடம் தந்தது. சிலர் எதிரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அவரவர் பேருந்திற்காகக் காத்திருந்தபடி பாதி நனைந்திருந்தோம்.


"மழை என்னமா பெய்யுது.. நனையறது நல்லாத் தான் இருக்கு.  ஒடம்புக்கு ஏதும் ஆகலைனா பரவால்ல.." எண்ணியவாறே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த அனைவரும் ஆண்கள். கொஞ்சம் கூச்சமாகத் தான் இருந்தது. இவ்வளவு நெருக்கத்தில் நிற்பது. ஒரு பக்கம் இந்த பயம். இன்னொரு பக்கம் பேருந்து வரவேண்டும் என்ற அவசரம். நொடிகள் யுகங்களாகத் தெரிந்தன. 

கடைசியாகப் பேருந்து வந்தது. "ஐயோ.. இவ்வளோ கூட்டமா?" என்று எண்ணிக்கொண்டே ஏறினேன் வேறு வழி தெரியாமல். உடையெல்லாம் பாதி நனைந்திருக்க கூட்டத்திற்குள் புகுந்தேன். ஃபூட் போர்ட் தான்.

”அட.. என்னுடன் அவனும்! இவ்வளவு நேரம் எங்கே நின்று கொண்டிருந்தான் எனக்குத் தெரியாமல்?” ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஏறி நின்றான். எனக்கு அடுத்தப் படியில்.

"அட.. உள்ள வாங்கப்பா. மேல ஏறுமா. படியில நிக்காத. நடத்துனர் சத்தம் போடவும் நெருக்கிக் கொண்டு உள்ளே ஏறினேன். அவனும் ஒரு படி மேலே ஏறினான். மிக நெருக்கமாக. நான் விழுந்தால் அவன் மேல் தான் விழ வேண்டும். கடவுளே. பத்திரமாகக் கல்லூரிக்குப் போய்ச் சேர வேண்டும். நானும் அவனும்.

இதென்ன.. அவனுக்காகவும் நான் வேண்டிக் கொள்வது? திடீரென்று அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சட்டென்று விலகி நின்றான். ஏதோ நான் கோபத்தில் பார்ப்பதாக எண்ணிக் கொண்டு. எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அதே வேகத்தில் நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

"ரெண்டு காலேஜ்" என்று அவன் டிக்கெட் எடுத்தது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். உனக்கும் எடுத்துவிட்டேன் என்று அவன் கண்கள் சொல்லியதாகப் பட்டது. மறுபடியும் ஒரு உணர்ச்சியும் இல்லாமல் நான் திரும்பிக் கொண்டேன். அடுத்தப் பேருந்து நிறுத்தத்தில் இன்னும் இருவர் ஏறினர். என் கல்லூரி மாணவர்கள் தான். படியில் நிற்க இடமில்லை. அவன் இன்னும் மேலே ஏறி என்னருகில் உரசிக் கொண்டு நின்றான். அந்தக் குளிரில் அவனுடைய வெப்பமான மூச்சுக் காற்று என் முதுகில் பட்டதை உணர முடிந்தது. கண்களைச் சிக்கென மூடிக் கொண்டு நின்றேன். மேலே என் ஒரு கை கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

"என்னடா.. இன்னைக்கு பஸ்?" என்றான் புதிதாக ஏறியதில் ஒருவன்.

"பைக் சர்வீஸ்க்கு விட்டுருக்கேன்டா. மழை வேற. நல்ல வேள.. இன்னைக்கு பஸ்ல வந்தேன்" என்று இவன் பேசியது கேட்டது. கடைசி வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் அழுத்தமாக வந்ததன போல் இருந்தது எனக்கு.

"டேய்.. ஏதோ ப்ளான் பண்ணி வந்திருக்குற மாதிரி இருக்கு?" என்று சிரித்துக்கொண்டே கூறினான் இன்னொருவன். அவன் என்னைப் பார்த்து தான் சொல்லியிருப்பான் என்பது திரும்பிப் பார்க்காமலே எனக்குத் தெரிந்தது.

அதற்கு அவனிடம் பதில் இல்லை. எனக்கோ நெருப்பு மேல் நிற்பது போல் இருந்தது.

"என்னடா.. பேச மாட்டேங்குற? எப்ப உன் வைஃப்-அ வீட்டுக்குக் கூட்டிட்டு போகப் போற?" என்று சின்சியர் சிகாமணியாகக் கேட்டவனின் மேல் எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இந்த நேரத்தில் இவ்வளவு கூட்டத்தில் இந்த மழை நேரத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் இப்போது இந்தக் கேள்வி ரொம்ப முக்கியமோ என்று கேட்கத் தோன்றியது.

"டேய்.. சும்மா இருடா" என்று இவன் அவசரமாக மறுத்தது கேட்டது. அப்புறம் அமைதி. மழைச் சத்தம் மட்டும் விடாமல் இறைந்து கொண்டிருந்தது. இனிமேல் இடையில் நிறுத்தம் ஏதுமில்லை. காலேஜ் தான் அடுத்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கம்பியில் பிடித்திருந்த கையை மாற்றினேன். "ஐயோ.. இப்பொழுது பார்த்தா இந்த டிரைவர் சடன் ப்ரேக் போட வேண்டும்?" நிலை தடுமாறி அவன் மார்பில் சாய்ந்தேன். தாங்கியிருந்த அவனிடமிருந்து உடனே சுதாரித்துக் கொண்டு விலகிக் கொண்டேன். கண்களை மூடிக் குனிந்து கொண்டேன்.

கழுத்தில் கட்டி இருந்த மஞ்சள் தாலியின் ஈரம் இன்னும் காயவில்லை. திடீரென்று அப்பாவின் முகம் கண்ணுக்குள் வந்தது.

"என் பேச்சை மீறி இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்க? எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் உனக்கு? அவன் சொல்லிக் கொடுத்தானா? போன வாரம் பொண்ணு பார்த்துட்டுப் போனவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? அப்பா சரின்னு தலைய ஆட்டிட்டு இன்னிக்கு என் பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப் போய்த்  தாலி கட்டிட்டு வந்து நிக்குறானு சொல்ல முடியுமா? உன்ன சொல்லிக் குத்தமில்ல. தாயில்லாப் பிள்ளைன்னு செல்லம் கொடுத்த வளர்த்த என்ன தான் செருப்பால அடிக்கணும்..." நேற்று நடந்தது போல் காதில் ஒலித்தது.

சம்பந்தமே இல்லாமல் அம்மாவின் முகம் நினைவிற்கு வந்து அழுகை மூட்டியது.

பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. இறங்கி உடையைச் சரிசெய்து கொண்டேன். பூ அதுக்குள்ளே கசங்கி விட்டிருந்தது.

"மாமா எப்படி இருக்கார்?"

"ம் ம்.. நல்ல இருக்கார்" கேட்டுக் கொண்டே பக்கத்தில் நடந்து வந்தவனின் முகத்தைப் பார்க்காமல் பதில் கூறினேன்.

"அக்டிவா என்ன ஆச்சு?"

"ஏதோ ப்ராப்ளெம். ஸ்டார்ட் ஆகல"

"ஒரு மொபைல் வாங்கி தரவா?"

" வேண்டாம்... ரொம்ப தேடும். இன்னும் ரெண்டு மாசம் தான? அதுக்கு அப்புறம் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருவல்ல?" வார்த்தை தொண்டையில் சிக்கிக் கொண்டது.

"வேலை போஸ்டிங் டேட்டுக்கு ஒரு பத்து நாள் முன்னாடி நீ என்கூட வந்திருவ. சரியா? அப்புறம் நம்ப ரெண்டு பேர் மட்டும் தான் சென்னைக்குப் போறோம். சென்னையில வீடு செட் ஆயிருச்சு. பயப்படாம இரு. ரொம்ப படிக்காத. வீட்டுல இருந்து சமையல் பண்றதுக்கு இவ்வளவு தேவையில்ல" சொன்னவனைப் பார்த்துக் கோபமாய் முறைக்க முயன்றேன்.

"வரலடி.. விட்டுரு.." என்று கண் சிமிட்டிக்கொண்டே சொன்னவனை அடிக்க வந்த கைகளை அடக்கிக் கொண்டு உதட்டில் வந்த சிரிப்பையும் அடக்கிக் கடித்துக் கொண்டு வேகமாக நடந்தேன்.. எனது வகுப்பை நோக்கி.
*
*
Read More...

வலையுலகிற்கு ஒரு வணக்கம்

Sep 11, 2010

சமர்த்துக்குட்டியா இருப்பேன் :)

ரொம்ப நாளாக ஆசைபட்டு இறுதியில் எனக்கென ஒரு வலைதளத்தை உருவாக்கிவிட்டேன்.. எழுத வேண்டும் எங்கிற ஆசை உள்ள எல்லாருக்கும் Blogging ஒரு வரப்பிரசாதம்! இந்தப் பதிவின் மூலம் நான் கேட்டுக் கொள்வது எல்லாம்...... “என்னையும் உங்க கூட சேர்த்துக்கோங்க” என்பது தான்.

எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

Read More...